கண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 மார்ச், 2025

ஏக்கம் கவிதை

 


ஏக்கங்களுக்கு 

எப்போதும் 

என் மீதான 

பிரியங்கள்  

அதிகம்… 

விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,

ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,

மனத்திரையில் மட்டும் கண்டு,  ஏக்கங்களோடு கடந்துபோகும் 

மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு  தினம்தினம்  நடத்தும் போராட்டங்களை  என்னவென்று சொல்ல…

கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…



திங்கள், 10 மார்ச், 2025

தனிமையும் நானும்..



இந்த விரல்களுக்கிடையே ஒரு 

கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது.. 


அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…


அது தன் எண்ணங்களை 

எல்லாம் கோலங்களாய் 

வடித்துக்கொண்டிருக்கிறது…


அவ்வப்போது , மேகவெளியில் 

மிதந்து நட்சத்திரங்களோடு 

கதைபேசிக்கொண்டிருக்கும்… 


தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…

தனக்கான தேடலை தொடர்ந்தபடியே… 

 

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அடுப்பங்கறை பிரம்மாக்கள்


அடுக்களைக்குள்
அழிந்துபோன
பிரம்மாக்களை
நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா?
கவிஞராய் ,நிபுணராய்,நாட்டியராய் ,ஓவியராய்,வீராங்கனையாய் ...
இன்னும் எத்தனையோ
சாதனைகள் படைக்கும்
பிரம்மாக்களை
இழந்து விட்டோமென
நீங்கள் வருந்தியதுண்டா?

கயல்விழியும் ,மெல்லிடையும்,கார்கூந்தலும்
அடையாளமென வகைப்படுத்தி விட்டீர்!
மறைக்கப்பட்ட எங்களின் அடையாளங்கள் இன்னும் எத்தனையோ?

உண்மையை உரக்கச் சொன்னால்,இங்கே
செவிசாய்க்க சிலர் இருப்பர் இதோ உங்களைப்போல !

கண்டுவைத்த
கனவுகளை எண்ணி ,
கசிந்துருகும்,
கன்னிகளைப்பற்றி
என்றாவது வியந்ததுண்டா?

என்னைப்போல,
ஆதங்கம் உங்களுக்கும்
இருக்குமென்றால்,
ஆதரியுங்கள்!
சில அடுப்பங்கரை
பிரம்மாக்களை......
-சங்கீதா செந்தில்

வியாழன், 26 ஜனவரி, 2017

உன்னையே எண்ணி இன்னமும் நான் ...

என் பாதைகள் எங்கும்
உன் பாதங்கள் தேடி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான்...

உன் ஒற்றைச்சொல் கேட்க
ஓடிவரும் மழலைபோல,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ....

ஆதிமுதல் அந்தம் வரை
எல்லமாகிப்போன,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

போகும் இடங்கள் எங்கும்
தொடரும் உன் நினைவுகள் ஏந்தி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

என் இறுதி மூச்சின்
உஷ்ணமது தீரும்வரை
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...

வியாழன், 7 ஜனவரி, 2016

உன்னால் முடியும் அன்பே!!!

ஒற்றைச் சொல் பேசி , உயிர்க்கிழிக்க உன்னால் முடியும் அன்பே !!!

உன் மீதான என் எண்ணங்களை , 
அரை நொடியில் அறுத்தெடுக்க 
உன்னால் முடியும் அன்பே!!!!

உன் கோபத்தீயில் கருகிச் சாக ,
கண்ணீருடன் காத்திருப்பேன் அன்பே!!!

கிழிந்த இதயம் கொண்டு ,
கிழவியாகும் வரை 
காத்திருப்பேன் அன்பே...

அன்பு செய்யும் நேரம் ,
அடடா ! இவன் போல யாருமுண்டோ
என எண்ண வைப்பாய் !!

கோபம் கொள்ளும் அந்நேரம் ,
ஆயிரம் சூரியனாய் சுட்டெரிப்பாய் !

போதுமிது ! போதுமிது !! என்னவனே !!!!
உன் கோபத்தீயை என் கண்ணீர்க்கடல் 
அணைத்திடுமோ?
அல்லது
என் கண்ணீரும் உன் முன்னே பயந்து 
கரைந்திடுமோ? 
விடை சொல் 
என்னுயிரே....


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...